தினம் ஒரு திருமந்திரம்

பாடல் 18: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
யதுபதி யாதரித் தாக்கம தாக்கென
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.

விளக்கம்:

குபேரன் இறைவன் மேல் கொண்ட தீராத பக்தியினால், அவரை நோக்கிச் செய்த நிறைவான தவத்தை கண்டு மெச்சிய இறைவன் அவனை உலகத்திலுள்ள செல்வங்களுக்கெல்லாம் தலைவனாக ஆக்கிவிட்டு இனி வடக்குத் திசையிலிருக்கும் அழகாபுரியே உன்னுடைய ஊர் நீ அதற்கு அரசன் என்றும் தம்மை நாடி வருபவர்களை ஆதரித்து அவர்களைத் தம் உறவினர்போல ஆதரவு கொடுத்து அவர்களுக்கும் வேண்டிய செல்வம் வழங்குவாயாக என்றும் அருளிய மாபெரும் கருணையாளன் எம்பெருமான்.

உள் விளக்கம்:

உலகப் பற்றுக்களில் விருப்பம் வைக்காமல் இறைவனின் மேல் தீராத அன்பு கொண்டு அவனை எண்ணி வடதிசை நோக்கி (இங்கே வடதிசை என்பது ஏழாவது சக்கரமான சுழுமுனை நாடியின் உச்சமான சகஸ்ரரதளத்தைக் குறிக்கும்) தவம் புரிந்தால் (தியானம் செய்தால்) அளவிடமுடியாத அளவு செல்வங்களைக் (உலக செல்வங்களுக்கும் மேலான செல்வங்களான சித்திகளையும் முக்தியையும்) கொடுத்து அந்தச் செல்வங்களுக்கெல்லாம் நம்மைத் தலைவனும் ஆக்குபவன் எம்பெருமான் இறைவனே.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS